Bandh against Erode Periya Mariamman Temple Break for Useless Bridge
http://www.dailythanthi.com/article.asp?NewsID=570110&disdate=5/29/2010&advt=2
ஈரோட்டில் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு, மே.29-
ஈரோட்டில் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கடையடைப்பு
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் கட்டப்படும் மேம்பாலத்தினால் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பாதிக்கப்படும் என்று கூறி வரும் பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு இயக்கத்தினர், பிரப் ரோட்டில் இருந்து பெரியார் நகர் வரை 80 அடி அகல சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பன்னீர் செல்வம் பூங்காவில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஈரோட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்த அழைப்புக்கு ஈரோடு நகரப்பகுதியில் உள்ள பல்வேறு வியாபாரிகள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து நேற்று கடைகளை அடைந்து இருந்தன.
ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
கடையடைப்பு போராட்டத்தால், ஈரோடு நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், கனி மார்க்கெட்டில் உள்ள ஜவுளி கடைகளில் நாள் ஒன்றுக்கு நடைபெறும் ரூ.50 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தார்கள்.
நேதாஜி தினசரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால், கடையடைப்பு குறித்து தகவல் தெரியாமல் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
காய்கறி விலை உயர்வு
காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால், ஈரோட்டை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் நேற்று முன்தினம் வாங்கப்பட்ட காய்கறிகள் குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அந்த காய்கறிகள் கிலோவுக்கு ரூ.10 வரை விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. இதைப்போல் கிராமப்புறங்களில் இருந்து ஈரோட்டிற்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், ஏமாற்றத்துடன் ஊர்களுக்கு திரும்பி சென்றார்கள்.
ஈரோடு நகரப்பகுதியில் ஒரு சில டீக்கடைகள் மட்டுமே திறந்து இருந்ததால், பொதுமக்கள் டீ குடிக்கக்கூட அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடக்கும் பந்த்துக்கு கைத்தறி துணி வணிகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரோடு கைத்தறி துணி வணிகர்கள் சங்கம் மற்றும் இணை சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் நடராஜ முதலியார் தலைமையில் நடந்தது. பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அமையவுள்ள “எல்’ வடிவ மேம்பாலம் பொதுமக்களுக்கு பயனுடையதாக இல்லை என கருதுவதால், பாலம் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். 80 அடி சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தற்சமயம் பெரிய மாரியம்மன் கோவில் உள்ள இடத்துக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல் இருக்க வேண்டி, இன்று நடக்கும் கடையடைப்பில், கைத்தறி துணி வணிகர் சங்கமும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஈரோடு கைத்தறி துணி வணிகர் சங்கம், என்.எம்.எஸ்.காம்பவுண்டு காமராஜ் வீதி வியாபாரிகள் சங்கம், சொக்கநாத வீதி வியாபாரிகள் சங்கம், இளம் வணிகர்கள் நலம் நாடும் சங்கம், திருவேங்கிடசாமி வீதி வியாபாரிகள் சங்கம் மற்றும் ராமசாமி வீதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.