மோசடி செய்த பாதிரியாரை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து செய்த பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்கு
October 17, 2009 Leave a comment
கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் : பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்கு
தினமலர் ஜூலை 04,2008,00:00 IST
http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=883&cls=row4&ncat= DI
திருவண்ணாமலை : மோசடி செய்த பாதிரியாரை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து செய்த பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யும்படி திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பாதிரியார் சுகுமார் ஜெய்சிங். எபினேசர் அறக்கட்டளை நிறுவனராகவும், காருண்ய ஜெப லேக்கிய அமைப்பு தலைவராகவும், இந்திய கிறிஸ்துவ மனித உரிமை அமைப்பின் தேசிய தலைவராகவும் இருந்து வருகிறார்.
ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாகவும், அதற்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் கூறி, கடந்த 1999ல் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பகுதி பொறுப்பாளர்களை நியமித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளராக கிருஷ்டி மற்றும் அவருடைய கணவர் ராமானுஜம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் 786 ஏழைகளிடம் தலா ரூ. ஆயிரத்து 750 கட்டணமாக பெற்று, உறுப்பினர்களாக சேர்த்தனர்.
“உறுப்பினர்களாக சேர்ந்தவர்களிடம் வீடு கட்டிக் கொடுக்க ரூ. ஏழாயிரத்து 500 மதிப்பீட்டில் சொந்த செலவில் கடக்கால்(பேஸ் மட்டம்) போட வேண்டும்’ என சுகுமார் ஜெய்சிங் கூறினார். அதன்படி உறுப்பினர்களாக சேர்ந்தவர்களும், தாங்கள் வாங்கிய நிலங்களில் வீடு கட்டுவதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதி ஏற்படுத்தினர்.
ஆனால், வீடு கட்டி கொடுக்காமல் தொடர்ந்து பாதிரியார் சுகுமார் ஜெய்சிங் ஏமாற்றி வந்தார். அது பற்றி 2000 ஆக., 22ல் திருவண்ணாமலையில் டி.எஸ்.பி., யாக பணிபுரிந்த லட்சுமியிடம், கிறிஸ்டி மற்றும் ராமானுஜம் ஆகியோர் புகார் செய்தனர். தற்போது லட்சுமி சென்னை திருவல்லிக்கேணியில் உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.
விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி லட்சுமி, பாதிரியார் சுகுமார் ஜெய்சிங்கிற்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்தார். வேறு வழியின்றி திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சுகுமார் ஜெய்சிங் மீது வழக்கு பதிவு செய்தனர். எனினும் பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரும் தலைமறைவாகி விட்டார்.
பணம் கொடுத்து ஏமாந்த திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ்மோகன் சந்திரா, எல்லப்பன் ஆகியோர், திருவண்ணாமலை சீப் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, தற்போதைய உதவி கமிஷனர் லட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க எஸ்.பி., பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து, திருவண்ணாமலை நகர போலீஸார், போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.